மாசி மகம் சிறப்புகள் மற்றும் வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து மாசி மகம் சிறப்புகள் மற்றும் வழிபாடு பற்றிய பதிவுகள் :

மாசி மகத்தன்று கும்பகோணம் மஹாமகம் குளத்தில் நீராடுவது மிகவும் சிறந்தது. முடியாதவர்கள் தங்கள் வீடுகளுக்கு அருகில் உள்ள நீர் நிலைகளில் நீராடி, மஹாமகம் குளத்தில் நீராடி பலனை பெறலாம். இந்த நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்தல் ஏழு தலைமுறை பாவங்களை போக்கக் கூடியதாகும்.

மாசி மகம், புனித நீராடுவதற்கு மிக உகந்த நாள். ஆனால் இந்த நாளில் எந்த தெய்வத்தை வழிபட வேண்டும், எப்படி வழிபட வேண்டும், எப்படி விரதம் இருக்க வேண்டும் என்பதை பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்.

பங்குனி உத்திரம், தைப்பூசம் என்றால் முருகனுக்கு உரியது, சிவராத்திரி என்றால் சிவனுக்கு உரியது, நவராத்திரி என்றால் அம்மனுக்கு உரியது, ஏகாதசி என்றால் பெருமாளுக்கு உகந்தது என்பதை போல் மாசி மகம் எந்த தெய்வத்திற்கு உரியது என்ற கேள்வி எழுகிறது. 

இதனாலேயே மாசி மகத்தின் மகத்துவம் பலருக்கும் தெரியாமல் உள்ளது. மாசி மகத்தன்று எந்த தெய்வத்தை எப்படி வழிபட வேண்டும், வழிபட்டால் என்ன பலன் கிடைக்கும் என்பதை நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

மாசி மகம் சிறப்புக்கள் :

மாசி மகம் நட்சத்திரமானது பல வகையிலும் சிறப்பு பெற்றது. இந்த நாளில் தான் புனித நதிகள் தங்களின் பாவங்களை போக்கி, தங்களை புதுப்பித்துக் கொள்கின்றன. இந்த நாளில் தான் தட்சனின் மகளாக பார்வதி தேவி தாட்சாயினியாக அவதரித்ததாக சொல்லப்படுகிறது. 

வருண பகவானுக்கு சிவ பெருமான் தோஷ நிவர்த்தி அளித்து, வரமளித்த நாள் மாசி மகம் திருநாள். இப்படி பல சிறப்புக்களை கொண்ட மாசி மகத்தன்று அனைத்து தெய்வங்களையும் வழிபடலாம். மாசி மகத்தன்று குல தெய்வத்தை வழிபடுவதும், தரிசிப்பதும் மகத்தான பலன்களை அள்ளித் தரும்.

முருகப் பெருமான் சிவ பெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்தது மாசி மகம் நாளில் தான். மாசி மகத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டால் நிச்சயம் குழந்தை பேறு கிடைக்கும்.

அம்மனுக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வந்தால் கணவன் - மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகள், சண்டைகள் நீங்கி, குடும்ப ஒற்றுமை சிறக்கும். குங்கும அர்ச்சனை செய்து வழிபடுபவர்களுக்கு இன்பமும் வெற்றியும் தேடி வரும்.

சிவ பெருமானை வழிபட்டால் சகல விதமான தோஷங்களும் நீங்கி நன்மை கிடைக்கும். சக்தியையும் சிவனையும் வழிபட்டால் சகல செளபாக்கியங்களும் கிடைக்கும்.

திருமால், வராக மூர்த்தியாக அவதாரம் எடுத்து பூமியை காத்ததும் மாசி மகத்தன்று தான். அதனால் பெருமாளை வழிபட்டால் அவரின் பரிபூரண ஆசிகள் கிடைப்பதுடன், ஐஸ்வர்யங்கள் பெருகும்.

ஞான மற்றும் முக்திக்கு காரணமான கேது பகவான் மகம் நட்சத்திற்கு அதிபதி. அதனால் மாசி மகத்தன்று நவகிரக சன்னதியில் வஸ்திரம் சாற்றி, கேது பகவானை வழிபட்டால் அறிவாற்றல் சிறக்கும்.

மகம் நட்சத்திரம் பித்ருக்களுக்கு உரிய நட்சத்திரம் என்பதால் மாசி மகத்தன்று முன்னோர் வழிபாடு செய்வதும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதும் குடும்ப நலனை பெருக செய்யும்.

Post a Comment

Previous Post Next Post