ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ராமேஸ்வரம் கோயிலில் உள்ள 4 அதிசய லிங்கம் பற்றிய பதிவுகள் :

இந்தியாவில் பல்வேறு கோயில்கள் உள்ளன. ஒவ்வொன்றும் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்ததாக இருக்கின்றன.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் பல்வேறு சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. காசிக்கு நிகராக போற்றப்படும் ராமேஸ்வரம் திருக்கோயில் ராமாயணத்துடன் தொடர்புடையது.

சீதா தேவி ராவணனிடமிருந்து மீட்கப்பட்ட பின் தன் கற்பை நிரூபிக்க அக்னி பிரவேசம் செய்தார். அப்போது அக்னியின் சூடு, அக்னி பகவானாலேயே தாங்க முடியாததாக இருந்ததால், அவர் கடலில் மூழ்கி தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார். அந்த கடல் தான் இராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம்.

ராமேஸ்வரத்தில் இருக்கும் 4 அதிசய லிங்கங்கள்

1.காசிலிங்கம் 

ராவணனை வதம் செய்ததால் ஏற்பட்ட பிரமஹத்தி தோஷத்தை போக்கும், சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட நினைத்தார். ராமபிரானின் ஆணைக்கிணங்க காசியிலிருந்து அனுமன் கொண்டு வந்த காசி லிங்கம். இந்த லிங்கம் இன்றும் ராமேஸ்வரம் கோயிலில் உள்ளது.

2.மணல் லிங்கம்

காசி விஸ்வநாதருக்கு நிகராக போற்றப்படக்கூடியதாக சீதா தேவியால் மணலில் உருவாக்கப்பட்ட ராமேஸ்வரம் ராமநாதசுவாமி சிவலிங்கம். இது தான் இந்த கோயிலில் மூலவராக இன்றும் உள்ளது.

3.உப்பு லிங்கம்

மற்றொன்று பாஸ்கரராயர் என்ற அம்பாள் பக்தர் உருவாக்கிய உப்பு லிங்கம்.

ஒருமுறை கோயிலில் உள்ள மணல் லிங்கம், மணலால் செய்யப்பட்டிருக்க முடியாது. மணலால் செய்யப்பட்டிருந்தால் அபிஷேகம் செய்யும் போது அது கரைந்து போயிருக்கும் அல்லவா என்ற தர்க்கம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்திருந்த அம்பாள் பக்தர் பாஸ்கரராயர் என்பவர், இல்லை மணலால் தான் செய்யப்பட்டது என வாதம் செய்தார்.
மற்றவர்கள் நம்ப மறுத்ததால், நான் இப்போது ஒரு உப்பு லிங்கம் செய்து அதற்கு அபிஷேகம் செய்து காண்பிக்கிறேன் என்றார்.

அவர் சொன்னதுபோலவே ஒரு உப்பு லிங்க செய்து அபிஷேகம் செய்தார். லிங்கம் கரையவில்லை.
அம்பாள் பக்தனாகவும், சாதாரண மனிதனாகவும் இருக்கக்கூடிய நான் செய்த உப்பு லிங்கமே அபிஷேகம் செய்யும் போது கரையவில்லை என்றால், எம்பெருமான் மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமபிரானின் மனைவியான சீதாதேவி செய்த மணல் லிங்க கரையாமல் இருப்பதில் என்ன அதிசயம் இருக்கிறது.

இந்த உப்பு லிங்கத்தை வஜ்ராயுத லிங்கம் என்று அழைப்பர். இவரை வழிபட்டால் சகல நோய்களும் குணமாகும் என்பது நம்பிக்கை. ராமேஸ்வரத்தில் சிவராத் திரி அன்று காலை திறக்கும் கோயிலை மறுநாள் பிற்பகலில்தான் மூடுவார்கள். இரவு முழுவதும் ஆலயத்தில் அபிஷேக ஆராதனைகள் நடக்கும். தேவராரம், திருவாசகம், ருத்ர, சமக பாராயணங்கள் தொடர்ந்து ஒலிக்க நான்கு ஜாமங்களிலும் தனித்தனி அலங்காரத்தில் சுவாமி திருவுலா வந்து அருட்பாலிப்பார்

4.ஸ்படிக லிங்கம்

ராமேஸ்வரம் கோயில் கர்ப்ப கிரகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்படிக லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு தினமும் காலை 5 மணி முதல் 6 மணி வரை பாலாபிஷேகம் நடைபெறும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post