சிவ வழிபாடு

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சிவ வழிபாடு பற்றிய பதிவுகள் :

சிவாலயத்தில் பலி பீடத்தருகில் தான் நமஸ்கரிக்க வேண்டும். 3, 4, 7, 9 என்ற எண்ணிக்கைகளில் ஏதாவது ஒன்றினை மேற்கொள்ளலாம். வடபுறம், கிழக்குப்புறம் கால் நீட்டக்கூடாது. ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும், பஞ்சாங்க நமஸ்காரமும் செய்ய வேண்டும். கிழக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்குத் தென்கிழக்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும்.

தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதிகளில் பலிபீடத்திற்கு தென்மேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னதியானால் பலிபீடத்திற்கு வடமேற்கு மூலையில் சிரம் வைத்து நமஸ்கரிக்க வேண்டும். சூரிய கிரகணத்தின் போதும், சங்கராந்தி காலத்திலும் மேற்கே கால் நீட்டி நமஸ்கரிக்கலாகாது.

அதே சமயம் திரியாங்க நமஸ்காரம் (இருகரங்களையும் சிரம் மேல் குவித்து) செய்ய வேண்டும். பிராகாரத்தில் பிரதக்ஷிணம் செய்யும்பொழுது மிகவும் நிதானமாகச் செய்யவேண்டும். உட்பிராகார பிரதக்ஷிணத்தைவிட வெளிப்பிரகார பிரதக்ஷிணமே சாலச் சிறந்தது. 3,5,7,7,15,21 என்ற எண்ணிக்கையில் ஒன்றினை மேற்கொண்டு செய்யலாம்.

பஞ்சாட்சர மந்திரமே மிகவும் சக்தி வாய்ந்தது.

சிவ மந்திரங்களை நீங்கள் பாராயணம் செய்யும் போது வாழ்வின் எல்லா இன்பங்களையும் பெறுவீர்கள். சிவ மந்திரங்களுள் "நம சிவாய'' என்னும் பஞ்சாட்சர மந்திரமே மிகவும் சக்தி வாய்ந்தது. பிறர் காது கேட்க மந்திரத்தை உரக்கக் கூறுவது கூடாது.
தனக்கு மட்டும் கேட்கும் அளவு உதட்டசைவில் கூறுவது மத்திமம். மானசீகமாக மந்திரத்தை மனத்திற்குள் சிந்தனை செய்து ஜபிப்பதே உத்தமம். மந்திரங்களைப் பொருள் அறியாமல் ஜபித்தாலும் பலன் உண்டு.

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை'' (பூரணத்துவம்), "மங்களமானது'' என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவரும் ஆன இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.சிவதரிசனம் செய்யும் வேளைகளைக் கொண்டே பலன்கள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இந்து சமயக் கருத்துக்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவை: 

காலையில் தரிசிக்க நோய்கள் நீங்கும்.
நண்பகலில் தரிசிக்க தனம் பெருகும்.
மாலையில் தரிசிக்க பாவம் அகலும் 
அர்த்த சாமத்தில் தரிசிக்க வீடுபேறு கிடைக்கும்.

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்தும் சிவனின் தொழில் எனப்படுகிறது.சிவனின் ஐந்து முகங்கள் சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம். இம்முகத்தின் மூலம் ஆகம ரகசியப்பொருளினைக் கேட்டு அறிந்தனர் அறுபத்தாறு முனிவர்கள்.

அருவம், உருவம், அருவுருவம் என்ற மூன்றுவகையான சிவ வழிபாட்டு முறையில் உருவ வழிபாடும் சைவர்களால் கடைபிடிக்கப்படுகிறது. உருவ வழிபாட்டில் சிவனை, லிங்கம், மகேசுவர மூர்த்தங்கள், சிவ உருவத்திருமேனிகள் ஆகிய சிவ வடிவங்களாக சைவர்களால் வணங்குகிறார்கள். இந்த வடிவங்களை சிவ ரூபங்கள் என்றும், சிவ சொருபங்கள் என்றும் குறிப்பிடலாம். 

மகேசுவ மூர்த்தங்கள் என்று இருபத்து ஐந்து வடிவங்களும், உருவத்திருமேனிகள் என்று அறுபத்து நான்கு வடிவங்களும் குறிப்பிடப்படுகின்றன.சிவபெருமானை உருவ வழிபாடு செய்வதைவிட லிங்க வழிபாடு செய்வதே சிறந்தது என வியாசர் மகாபாரதத்தில் கூறி இருக்கிறார். 

`லிங்கம்' என்னும் சொல்லுக்கு எல்லாம் தோன்றி மறையும் மூலம் எனவும் `மங்கலத்தைத் தரும் பரம்பொருள்' எனவும், `அண்ட சராசரங்கள் யாவும் ஒடுங்குவதும் மீண்டும் உற்பத்தியாகி வெளிப்படும் தன்மை கொண்டது' என்றும் சிவாகமங்கள் விளக்குகின்றன.ஆலயங்களில் ஸ்தாபித்த லிங்கம் அசலம், இல்லங்களில் வைத்துப் பூஜிக்கும் லிங்கம் சலம். 

ஈசன் கருணைப் பெருக்கால் தோன்றியது சுயம்புலிங்கம்.சிவ வடிவங்கள் மொத்தம் 64 ஆகும். அவை போக வடிவம், யோக வடிவம், வேக வடிவம் என மூன்று வகைக்குள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. போக வடிவம் என்பது உமாமகேஸ்வரர், சந்திரசேகரர், ரிஷபாரூடர் முதலானவற்றை குறிக்கும்.

யோக வடிவம் என்பது தட்சிணாமூர்த்தி சுகாசனர் முதலானவற்றை குறிக்கும். வேக வடிவம் என்பது கங்காளர், வீரபத்திரர் முதலானவற்றை குறிக்கும். இவை முறையே உயிர்களுக்கு போகத்தை அருளுவதற்கும், யோகத்தை அருள்வதற்கும், வினைகளை நீக்கி அருள்வதற்கும் ஏற்பட்டவை சிவலிங்கம்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post