ஸ்ரீ கோமாதாவின் மஹத்துவம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஸ்ரீ கோமாதாவின் மஹத்துவம் பற்றிய பதிவுகள் :

கோபூஜை செய்யத் தொடங்கும் முன்னரே மகாலக்ஷ்மி அங்கு வந்து விடுகிறாள். முறைப்படி செய்த கோபூஜையில் திருப்தியடைந்து அங்கேயே குடி கொண்டு விடுகிறாள். பசுவின் கால் பட்ட மண், பசுக் கொட்டிலில் கிளம்பும் புழுதி நம்மீது படுவதற்குப் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.  

கோபூஜை செய்தால் சகல பாவங்களும் விலகி விடுகிறது. அனைத்துப் புண்ணிய நதிகளிலும், தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கிறது. பசுவின் கோமியம் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தக் கோமியத்துடன் பசுவின் சாணம், நெய், பால், தயிர் ஆகியவை கலந்த கலவையே மிகவும் புனிதமான பஞ்சகவ்யம் என்று அழைக்கப்படுகிறது. 

சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வதற்கு இந்தப் பஞ்சகவ்யம் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. பசுவின் பின்புறத்தில் மகாலட்சுமி வாசம் செய்வதால் அங்குப் பட்டுக் குடையைப் பிடிக்கச் செய்து. நாணயங்கள், ரோஜா, தாமரை, செவ்வரளி போன்ற மலர்களால் ஸ்ரீசூக்தம் சொல்லி, அர்ச்சனைகள் செய்யப்படுகிறது. 

நெய் சேர்க்காத சர்க்கரைப் பொங்கல் நெய்வேத்யம் செய்யப்படுகிறது. இந்தப் பூஜையைப் பார்த்து, மனதார வணங்கினாலே அனைத்துத் தோஷங்களும் நீங்கி வாழ்வில் ஆனந்தம் நிலைக்கும். வீட்டில் எப்போதும் கஷ்டம், சண்டை, சச்சரவு இருந்து கொண்டே இருக்கிறது என்றால் நவக்ரஹ கோளாறு என்று அர்த்தம். இந்த நவக்ரஹ கோளாறு நீங்க வேண்டும் என்றால் கோபூஜை, கோதானம் செய்வது சிறந்தது.
 
பசுவின் உடலில் அனைத்துத் தேவர்களும், நவக்ரஹங்களும் குடியிருப்பதால், கோபூஜை செய்தால் நவக்ரஹ தொல்லையிலிருந்து விடுபடலாம். 

குழந்தைப் பேறு வாய்க்கவில்லை என்றாலோ, குழந்தைகள் தீய வழிகளில் சென்றாலோ, கோபூஜை அல்லது கோதானம் செய்வது நல்லது.

பிதுர் தர்ப்பணம், திவசம் ஆகியவற்றை முறையாகச் செய்யவில்லை என்றால் பிதுர் தோஷம், பிதுர் சாபம் ஆகியவை ஏற்படும். அவை தீர வேண்டுமானால் கோதானம் செய்ய வேண்டும். 

திருமணம் தடைபட்டுக் கொண்டே இருக்கிறது என்றால் கடுமையான தோஷம் இருக்கிறது என்று பொருள். அதற்குப் பரிகாரம் கோதானமும் கோபூஜையுமே.

வலிமை வாய்ந்த சனிக்கிரக தோஷங்களிலிருந்து விடுபடவும், நோய்களிலிருந்து விடுபடவும் கோபூஜை மிகவும் அவசியமாகிறது. 

பிரிந்த கணவன்-மனைவி ஒன்று சேரவும், கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கவும் கோபூஜை செய்வது அவசியம். நீங்களும் பசுவைப் பூஜை செய்து அனைத்து நலன்களும் பெறுவீர்களாக.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post