ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாதத்தின் இரண்டாம் வெள்ளிக்கிழமை பற்றிய பதிவுகள் :

இன்று அம்பாளை ஆராதிக்கவும், சக்தியை வணங்கி முக்தியைப் பெறவும் உகந்த நாள். அன்னையின் தாள் பணிந்து அடைக்கலம் புகுந்தால், சொல்லி முறையிட்டால் குடும்பத்தில் நிம்மதி நீடித்து நிலைக்கச் செய்வாள் தேவி.

எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் ஆடி வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு. அன்றைய தினம் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடி வந்து கொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை. 

கிழமைகளில் சுக்ர வாரம் என்றழைக்கப் படுவது வெள்ளிக்கிழமையாகும். துள்ளித் திரியும் சிங்கத்தில் ஏறி பவனி வரும் தூயவளாம் அம்பிகையை வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும்.

ஆடி வெள்ளியன்று மாலை நேரத்தில் அம்பிகையை, ஆதிபராசக்தியை, அகிலாண்டேஸ்வரியை, புவனேஸ்வரியை அலங்கரித்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும். இதன் மூலம் குடும்ப முன்னேற்றமும், மாங்கல்ய பாக்கியமும், கணவருக்குத் தொழில் மேன்மையும் ஏற்படும். 

ஆடி வெள்ளியன்று குத்துவிளக்கு பூஜை செய்து சுமங்கலிப் பெண்களுக்கு ரவிக்கைத்துணி, தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு, மஞ்சள், குங்குமம் வைத்துக் கொடுத்தால் நற்பலன்கள் வந்து சேரும். இல்லத்தில் மங்கலம் உண்டாகும்.

அதேபோல் ஆடி மாதத்தில் வரும் ஒவ்வொரு வெள்ளியன்றும் புற்றுள்ள அம்மன் கோயிலுக்குச் சென்று நாகருக்குப் பால் வார்த்துக் குலம் தழைக்க வேண்டுதல் செய்துகொள்ளலாம். 

குலம் சிறக்க குடும்பத்தோடு பொங்கல் வைத்து மாவிளக்கு ஏற்றி வழிபட வளமும் நலமும் தந்து, சகல செளபாக்கியங்களுடன் வாழச் செய்வாள் தேவி.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post