ஆடி மாத சந்திர தரிசனம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி மாத சந்திர தரிசனம் பற்றிய பதிவுகள் :

அமாவசைக்கு அடுத்து வரும் மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும்.

செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வரும் மூன்றாம் பிறை மிகவும் விசேஷமான ஒன்றாகும். எனவே வரும் ஜூலை 30ஆம் தேதி (இன்று) சனிக்கிழமையன்று சந்திர தரிசனம் செய்து வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும்.

சிவன், பார்வதி, விநாயகப்பெருமான் போன்ற தெய்வங்கள் சூடும் இந்த பிறை தெய்வீக சின்னமாகும்.

காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களையும் கடந்தவன் முக்தி அடையலாம் என்பதை நினைவுபடுத்துவதற்கே பெரியவர்கள் இந்த சந்திர தரிசனத்தை காணவேண்டும் என்று கூறினார்கள்.

ஒவ்வொருவரும் தன் வாழ்நாளில் ஆயிரம் மூன்றாம் பிறை பார்த்தால் முக்தி என சொல்லப்படுகிறது. சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனம் கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.

சந்திரனுக்கும் ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் கெட்டிருந்தால் அவர்களுக்கு நீண்ட ஆயுள் அமையாது. அவர்கள் மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவதால் ஆயுள் தோஷத்தை போக்கி ஆயுளை விருத்தியாக்கும்.

காலை வேளை பிரம்ம முகூர்த்தமாகும். மாலை வேளை விஷ்ணு முகூர்த்தமாகும். எனவே, மாலை வேளையில் சந்திர தரிசனம் செய்து, வீட்டில் விளக்கேற்றி வழிபட்டால் செல்வம் பெருகும்.

திருமணம் ஆனவர்கள் தம்பதி சமேதராக சந்திர தரிசனம் செய்யலாம். திருமணம் ஆகாதவர்கள் பெற்றோருடன் சேர்ந்து மூன்றாம் பிறையை தரிசிக்கலாம். இதனால் குடும்ப ஒற்றுமை பெருகும் என்பது நம்பிக்கை.

மேலும் சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிடைக்கும்.

அந்த வகையில் மூன்றாம் பிறை பார்க்க முடியாவிட்டால் வீட்டில் சிவ வழிபாடு செய்வதும், சிவன் தலையில் இருக்கும் சந்திரனை அன்று மாலை தரிசனம் செய்வதும் சிறப்பு.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post