சந்திர தோஷம் போக்கும் சோமவார விரதம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து சந்திர தோஷம் போக்கும் சோமவார விரதம் பற்றிய பதிவுகள் :

சோமவாரம் என்பது திங்கட்கிழமையை குறிக்கும். அன்றைய தினம் சிவபெருமானுக்கு உகந்த நாள். சோம என்றால் பார்வதியுடன் கூடிய சிவபெருமான் என்றும், சந்திரன் என்றும் பொருள்படும்.

திங்கட்கிழமை தோறும் அனுஷ்டிக்கப்படும் இந்த விரதத்திற்கு சோமவார விரதம் என்று பெயர். ஜாதகத்தில் சந்திர தோஷம் உள்ளவர்கள் திங்கள் தோறும் விரதம் இருந்து, தோஷ நிவர்த்தி பெறலாம். சந்திர திசை நடக்கும் பத்து ஆண்டுகளும் இந்த சோமவார விரதம் அனுஷ்டிப்பது நல்ல பலனை தரும்.

சந்திர பகவான் வழிபட்ட தலங்களில் குறிப்பிடத்தக்க தலம் திருப்பதி. சந்திர தோஷம் உடையவர்கள் அவசியம் திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய வேண்டும். இத்திருத்தலம் கீழ்திருப்பதி, மேல் திருப்பதி என இரட்டை நகரமாக அமைந்துள்ளது.

ஏழுமலையானை தரிசிப்பதற்கு முன்னர் கோவில் அருகில் உள்ள குளத்தில் குளித்து, ஸ்ரீவராக சுவாமியை வழிபட்டு, பிறகு ஏழு மலையானை தரிசிக்க செல்ல வேண்டும். கோவிலுக்குள் சென்றதும் ஓம் ஸ்ரீவெங்கடேசாய நம என்பதை மட்டும் உங்களுக்குள் தியானியுங்கள். 

திருமலையில் பூக்கும் எல்லா மலர்களும் ஏழுமலையானுக்கே சொந்தமாகும். எனவே அவற்றைப் பறித்துச் சூட கூடாது. திருப்பதி செல்லும்போது திருச்சானூர் அலமேலு மங்கையையும் அவசியம் தரிசனம் செய்யுங்கள்.

தஞ்சை மாவட்டம் திருவையாறுக்கு அருகில் திங்களூர் எனும் பாடல் பெற்ற தலம் உள்ளது. இது சந்திரன் கோவில். இங்கு பெரியநாயகி சமேத கைலாசநாதர் உள்ளார். பவுர்ணமி, அமாவாசை வரும் திங்கட்கிழமை அன்று அவரை வணங்கினால் கூடுதல் பலன் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது. 

தஞ்சையில் இருந்து திருவையாறு-கும்பகோணம் சாலையில் திருவையாறில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் இத்தலம் அமைந்துள்ளது. வெண்ணிற மலர் அர்ச்சனை, வெண்ணிற ஆடை, முத்து மாலை அணிந்து வழிபடுதல், பவுர்ணமி விரதம் இருத்தல், வெண்ணிற வஸ்திர தானம் செய்தல், அரிசி தானம் கொடுத்தல் இவற்றால் சந்திர கிரக தோஷம் நிவர்த்தி ஆகும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post