கந்தசஷ்டி கவசத்தின் விளக்கம்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து கந்தசஷ்டி கவசத்தின் விளக்கம் பற்றிய பதிவுகள் :

கவசம் என்றால் நம்மைத் தீமைகளிலிருந்தும், கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றக் கூடிய ஒரு பொருள் என்று கூறலாம். இது முருகனின் அருளைப் பெறுவதற்காக இயற்றப்பட்டது. கந்தசஷ்டி கவசத்தை இயற்றிய ஸ்ரீதேவராய ஸ்வாமிகள்.

கந்தசஷ்டி கவசத்தை தினமும் இருவேளை அதாவது காலையிலும், மாலையிலும் ஓத முருகனே காட்சி தந்துவிடுவான். 

ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு ஆகியவைகளைக் குறிக்கும். நாம் கந்தனின் திருவடியை விடாது பிடித்தால் மேலே சொன்ன ஒரு கெடுதலும் நம்மைஅண்டாது. வீட்டில் கடன், வியாதி, எதிரிகள் பயம் இல்லை என்ற நிலை ஏற்படும்.

கந்தன் வரும் அழகே அழகு, பாதம் இரண்டில் பண்மணிச் சலங்கை கீதம் பாட கிண்கிணியாட, மயில் மேல் அமர்ந்து ஆடி ஆடி வரும் அழகை என்னவென்பது? என இந்திரன் மற்றும் எட்டு திசைகளிலிருந்தும் பலர் போற்றுகிறார்கள்.

முருகன் வந்து விட்டான், இப்போது என்னை காக்க வேண்டும். பன்னிரெண்டு விழிகளும், பன்னிரெண்டு ஆயுதத்துடன் வந்து என்னை காக்க வேண்டும். அவர் அழகை வர்ணிக்கும் போது, பரமேஸ்வரி பெற்ற மகனே முருகா, உன் நெற்றியில் இருக்கும் திருநீர் அழகும், நீண்ட புருவமும், பவளச் செவ்வாயும், காதில் அசைந்தாடும் குண்டலமும், அழகிய மார்பில் தங்க நகைகளும், பதக்கங்களும், நவரத்தின மாலை அசைய உன் வயிறும், அதில் பட்டு வஸ்திரமும் சுடர் ஒளி விட்டு வீச, மயில் மேலேறி வந்து கேட்டவர்களுக்கு எல்லாம் வரம் தரும் முருகா, என்றெல்லாம் முருகனை ஸ்ரீதேவராயர் வர்ணிக்கிறார்.

வதனத்திற்கு அழகு வேல், நெற்றிக்குப் புனிதவேல், கண்ணிற்கு கதிர்வேல், நாசிகளுக்கு நல்வேல், செவிகளுக்கு வேலவர் வேல், பற்களுக்கு முனைவேல், செப்பிய நாவிற்கு செவ்வேல், கன்னத்திற்கு கதிர்வேல், கழுத்திற்கு இனிய வேல், மார்பிற்கு ரத்தின வடிவேல்.

இளமுலை மார்புக்கு திருவேல், தோள்களுக்கு வடிவேல், பிடறிகளுக்கு பெருவேல், அழகு முதுகிற்கு அருள்வேல், வயிற்றுக்கு வெற்றிவேல், சின்ன இடைக்கு செவ்வேல், நாண்கயிற்றை நால்வேல், பிட்டம் இரண்டும் பெருவேல், கணைக்காலுக்கு கதிர்வேல், ஐந்து விரல்களுக்கு அருள்வேல், கைகளுக்கு கருணை வேல், நாபிக்கமலம் நல்வேல், முப்பால் நாடியை முனைவேல், எப்போதும் என்னை எதிர்வேல், பகலில் வஜ்ரவேல், இரவில் அனையவேல் போன்ற பல்வேறு விதமான வேல்கள் நம்மைக் காக்கின்றன.

அடுத்தது எந்தெந்த வகை பயங்களில் இருந்து காக்க வேண்டும் என்று விளக்கப்பட்டுள்ளது. பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி இவைகள் அனைத்தும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும் என்கிறார்.

அடுத்து, புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும், பாம்பும் செய்யான், பூரான், ஆகியவைகளால் ஏற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்றும் கூறுகிறார்.

வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் கந்தசஷ்டி கவசத்தைப் படித்தால் உடனே சரியாகி விடும் என்கிறார். 

மேலும் இதைப் படித்தால் வறுமை ஓடிவிடும், நவகிரகங்களும் நமக்குத் துணை இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார். 

பின் சத்ருக்கள் மனம் மாறி விடுவார்கள் என்றும் முகத்தில் தெய்வீக ஒளி வீசும் என்றும் அப்பாடலில் கூறப்பட்டுள்ளது. எனவே நாள்தோறும் கந்தசஷ்டி கவசம் படியுங்கள். 

வேலனைப் போற்றி வணங்குங்கள்!! 
நீங்கள் பட்ட கஷ்டம் எல்லாம் விலகி ஓடிவிடும்.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post