ஆவணி அவிட்டம், உபகர்மா

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆவணி அவிட்டம் உபகர்மா பற்றிய பதிவுகள் :

ரிக், யஜூர் வேதம் பயின்ற வேதியர்கள் மட்டுமே பூணூல் மாற்ற பயன்படுத்திக் கொள்ளும் நாளாக ஆவணி அவிட்டம் உள்ளது. 

வேதங்களை வழிபடுவதற்குரிய இந்த நாள் இந்த ஆண்டு எந்த நாளில் வருகிறது, பூணூல் மாற்றிக் கொள்ள நல்ல நேரம் எது, இந்த நாளில் நடத்தப்படும் உபகர்மா சடங்கி முக்கியத்துவம் என்ன என்பது பற்றி நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆவணி அவிட்டம் என்பது பிராமண குலத்தவர்களின் மிக முக்கியமான நாளாகும். இந்த நாளில் பூணூல் மாற்றிக் கொள்ளுவது வழக்கம். ஆவணி மாதத்தில் பெளர்ணமியும், அவிட்டம் நட்சத்திரமும் இணைந்து வர நாளையே ஆவணி அவிட்டமாக கொண்டாடுகிறோம். 

இது வேதங்கள் அவதரித்த நாளாகவும், இந்த நாளில் தான் பெருமாள் ஹயக்ரீவராக அவதாரம் எடுத்து, வேதங்களை அசுரர்களிடம் இருந்து மீட்டதாகவும் புராணங்கள் சொல்கின்றன. அதனால் இதை ஹயக்ரீவ ஜெயந்தி என்றும் கொண்டாடுவது உண்டு. 

ஆவணி அவிட்டம் அன்று ஏதாவது கோவிலோ அல்லது நீர் நிலைகளுக்கு அருகிலோ புரோகிதர்கள் ஒரு குழுவாக அமர்ந்த மந்திரம் சொல்லி பூணூலை மாற்றிக் கொள்வார்கள்.

இப்படி பூணூல் மாற்றும் சடங்கிற்கு பிறகு, புதிதாக வேதங்கள் கற்க துவங்குபவார்கள். இதற்கு உபகர்மா என்று பெயர். கர்மா என்றால் கண்கள் என்று பொருள். 

உபகர்மா என்றால் நமக்கு இருக்கும் இரண்டு கண்களுடன் சேர்த்து, இறைவனை அறிவதற்கு மூன்றாவதாக ஞானம் என்ற கண் தேவை. அந்த கண்ணை வேதங்களை கற்பதின் மூலமே பெற முடியும். 

இறைவனும் மனிதனுக்கும் இடையே ஒரு பந்தத்தை ஏற்படுத்தவும், அதற்கு வழிகாட்டுவதற்கும் செய்யப்படும் சடங்கே உபகர்மா என்று சொல்கிறோம்.

ரிக்,யஜூர், சாம, அதர்வணம் என்று நான்கு வகையான வேதங்கள் உண்டு. இவற்றில் ரிக், யஜூர் ஆகிய இரண்டு வேதங்களும் மேஷம் துவங்கி துலாம் வரையிலான ராசிகளுக்கு உரியவை. சூரிய பகவான், சிம்ம ராசியில் பயணிக்கும் ஆவணி மாதத்தில் ரிக், யஜூர் வேதங்கள் தோன்றியதாக சொல்லப்படுகிறது. 

இந்த வேதங்களை கற்றவர்கள் தங்களை புதுபித்துக் கொள்ளும் நாளாக ஆவணி அவிட்டம் சொல்லப்படுகிறது. புதிதாக வேதம் கற்பவர்கள் இந்த நாளில் துவங்குவது வழக்கம்.

இந்த ஆண்டு ஆவணி அவிட்டம் ஆகஸ்ட் 19ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் அதிகாலை 03.07 மணி துவங்கி, ஆகஸ்ட் 20ம் தேதி அதிகாலை 01.09 வரை பெளர்ணமி திதி உள்ளது. 

அதே சமயம், அன்று காலை 09.09 மணிக்கு பிறகு தான் அவிட்டம் நட்சத்திரம் துவங்குகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி காலை 07.50 வரை அவிட்டம் நட்சத்திரம் உள்ளது. இருந்தாலும் பிரம்ம முகூர்த்த வேளையில் செய்யும் காரியங்களுக்கு நாள், நட்சத்திரம், கிழமை என எதுவும் பார்க்க வேண்டியதில்லை என்பார்கள். 

இதன் அடிப்படையில் அன்றைய தினம் அதிகாலை 04.32 மணி துவங்கி, 05.20 வரை பிரம்ம முகூர்த்தம் நன்றாக உள்ளதால் அந்த நேரத்தில் பூணூல் மாற்றிக் கொள்ளலாம் என சொல்லப்படுகிறது.

அதற்கு பிறகு பகல் 12 முதல் 01 மணி வரை நல்ல நேரம் இருப்பதால் இந்த நேரத்திலும் பூணூல் மாற்றிக் கொள்ளலாம். பகல் 01 மணி வரையிலான அனைத்து நேரங்களும் சாதகமாகன நல்ல நேரமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் பூணூல் மாற்றிக் கொள்பவர்கள் பகல் 1 மணிக்கு முன்பாக மாற்றிக் கொள்வது சிறந்தது.

நன்றி,
மோகன பிரியா.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

Post a Comment

Previous Post Next Post