ஆடி அமாவாசை மற்றும் சிதலபதி முத்தீசுவரர் திருக்கோயில் சிறப்புகள்

நமது ஓம் நமசிவாய ஆன்மீக குழுவிலிருந்து ஆடி அமாவாசை பற்றிய பதிவுகள் :

பஞ்சாங்கத்தின் படி, சூரியனும் சந்திரனும் ஒன்றாக ஒரு ராசியில் இணையும் நாள் தான் அமாவாசை என்று கூறப்படுகிறது. 

ஆடி மாதம், அதாவது தமிழ் வருடப்படி நான்காவது மாதம் கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கிறார். கடம் என்பது சந்திரனின் ஆளும் ராசி. கடகத்தில் சூரியன் சஞ்சரிக்கும் போது, சந்திரனும் கடக ராசிக்கு வரும் நாள் அமாவாசையாக வருகிறது. 

இந்த ஆடி மாதம், ஜூலை 28, 2022 ஆம் தேதி வருகிறது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்த நாளாக ஆடி அமாவாசை கருதப்படுகிறது. காசி, ராமேஸ்வரம் உள்ளிட்ட ஒரு சில கோயில்களில் பலரும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வார்கள். 

சிதலபதி முத்தீசுவரர் திருக்கோயில் சிறப்புகள்

சிதலபதி முத்தீசுவரர் கோயிலில் தான் ஸ்ரீராமர் மற்றும் ஸ்ரீ லக்ஷ்மணன் இருவரும் தங்களது தந்தையான தசரதனுக்கும், தங்களுக்காக உயிர்நீத்த ஜடாயுவிற்கும் தர்ப்பணம் செய்தனர்.

இங்கு ராமர் தர்ப்பணமும் சிரார்த்தமும் செய்ததால், சுயம்பு லிங்கமாக சிவபெருமான் தோன்றி, தசரதன் மற்றும் ஜடாயு இருவருக்கும் முக்தி அளித்தார். அதனாலேயே இவர் முக்தீஸ்வரர் என்று அழைக்கப்பட்டார். காலப்போக்கில் பெயர் மருவி, முத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் விநாயகர், மனித முகத்தில், அதாவது தும்பிக்கை இல்லாமல் காட்சியளிப்பது மிகவும் சிறப்பானதாகும். அழகான மனித முகத்துடன் விநாயகர் காட்சியளிப்பது மிக மிக விசேஷமாகக் கருதப்படுகிறது. முருகப்பெருமான் ஒரு முகத்துடன், நான்கு கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

நித்ய அமாவாசை திருக்கோயில்

மற்ற எந்த கோயிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பு இங்கு உள்ளது. இந்த கோயில் நித்ய அமாவாசை கோயிலாக கருதப்படுகிறது. அதாவது, ராமேஸ்வரம், காசி ஆகிய பித்ரு காரியம் செய்ய உகந்த கோயிலில் கூட, ஒரு சில நாட்களில் தான் பித்ரு காரியம் செய்ய முடியும். ஆனால், இந்த ஆலயத்தல், தினமும் பித்ரு காரியம் மற்றும் தர்ப்பணம் செய்யலாம். அதனால் இங்கு தினமும் அமாவாசை தினமாக, தினமும் தர்ப்பணம் செய்யக்கூடிய தலமாக விளங்குகிறது

இந்த கோயிலில், சூரியன் மற்றும் சந்திரன் இருவரும் ஒரே நேரத்தில் காட்சியளிப்பதால், தினமும் அமாவாசை ஏற்படுகிறது. எனவே, இந்த கோயிலில் தர்ப்பணம் செய்ய, பிதுர் காரியம் செய்ய, தெவசம் செய்ய என்று எதற்கும் நாள், நேரம், திதி, கிழமை என்று பார்க்க வேண்டாம்.

பொதுவாக முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் பிதுர் காரியம் செய்ய காசி, ராமேஸ்வரம், திருவெண்காடு, ஸ்ரீவாஞ்சியம், கயா, அலகாபாத்தில் உள்ள திரிவேணி சங்கமம் மற்றும் முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடற்கரை ஆகிய 7 தலங்கள் சிறந்த தலங்களாக கருதப்படுகிறது.
Admin

Om Namasivaya Team, Kanyakumari District, Tamil Nadu

1 Comments

  1. Kovil patri thangal sollum karuthukalukku nanri, kovil entha edathil ullathu enpathaiyam therivithal nanraka irrukkum.

    ReplyDelete
Previous Post Next Post